சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகள் இடையே நேற்று முன்தினம் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்கு வந்த ரசிகர்களில் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை சேப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையோரமாக வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்த இடத்தில் சென்னை சூளைமேடு பாரி தெரு அவ்வை நகரை சேர்ந்த பாலசுந்தரம் (வயது 38) தனது புல்லட் வாகனத்தை நிறுத்திவிட்டு போட்டியை பார்க்க சென்றார்.
இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் திருட்டிக் கொண்டு அதனை தள்ளியபடி 2 பேர் வந்தனர். அப்போது அங்கு சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சக்திவேல் அவர்கள் மீது சந்தேகம் அடைந்தார். 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அண்ணா சதுக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் ராஜன் (55), பெரும்பாக்கத்தை சேர்ந்த மணி (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் புல்லட் வாகனத்தை குறிவைத்து திருடுவதில் கை தேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 10 திருட்டு புல்லட் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.