தமிழக செய்திகள்

இணையவழி மூலம் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்: தொல்.திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மொழிப்போராட்டங்களில் உயிர் நீத்தவர்களின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக மொழிப்போர் வீரவணக்க நாள் கூட்டங்களை இணைய வழியிலேயே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன், நடப்பாண்டு நடராஜனின் வீரவணக்க நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சின்னசாமி தீக்குளித்த ஜனவரி 25-ந்தேதி வரை இணையவழியில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக நாளை மற்றும் வருகிற 18, 20, 23 மற்றும் 25 ஆகிய 5 நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இணையவழி கூட்டங்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் நாளை மொழிப்போரின் முதல் நாள் நடராஜனின் நினைவேந்தலாகவும், 18-ந்தேதி வழக்காடு மொழியாக தமிழ், 20-ந்தேதி பயிற்று மொழியாக தமிழ், 23-ந்தேதி ஆட்சி மொழியாக தமிழ் என்ற தலைப்புகளில் கூட்டங்கள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நடக்கிறது. அதுவரை தாய்த்தமிழ் காவலர்கள் வீரவணக்க நாட்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT