தமிழக செய்திகள்

சவாலில் வெல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஈரோடு,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற புரட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை வந்தார். நம்பியூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்பியூரில் மக்களை தேடி தலைவரின் மக்கள் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. அதுமக்களின் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. தலைவரின் ஆலயத்தை தினந்தோறூம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்து வழிபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை அங்கு வைக்கின்றார்கள் வாழும் சித்தராக இருந்து தெய்வமாக வழி நடத்தி செல்கிறார் என்பதுதான் உண்மை.

மக்கள் விரும்பும் கூட்டணி, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும். நாம் யாருடன் கூட்டணி வைக்கிறமோ, அவர்கள்தான் இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள். மந்திரி சபை அமைந்து தேமுதைகவும் அந்த மந்திரி சபையில் இடம்பெறும். நல்ல கட்சிக்கு நல்லவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஜனவரி 9 கடலூர் மாநாடு 2.0 வில் திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். கோபியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற சவாலில் வெற்றி பெற வேண்டும். தேமுதிகவின் இருண்ட காலம் சென்றுவிட்டது, இனி பிரகாசம்தான். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளன.தேமுதிக தொண்டர்களை அரசாங்க பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை.

இவ்வாறு அவர் கூறினார்.