வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நளினி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நானும் எனது கணவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளோம். எனது பெற்றோருக்கு வயது அதிகமாகி விட்டதால், அவர்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு என்னையும், கணவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி வேலூர் சிறையில் உள்ள முருகனையும், நளினியையும் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நளினியை சந்தித்து பேசியபோது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். கடந்த புதன்கிழமை அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
நளினி என்னிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் ஒரு கைதியின் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அந்த கைதியின் அறையில் சிறை அதிகாரிகள் யாரோ வேண்டும் என்றே செல்போன் வைத்துள்ளனர். எனது அறையில் வைக்கத்தான் சதி நடந்துள்ளது.
ஆனால் தெரியாமல் அந்த கைதியின் அறையில் மாற்றி வைத்துவிட்டனர். நான் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவதாக என்மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர் என்று கூறினார்.
சிறைத்துறை சூப்பிரண்டு ஆண்டாளிடம் நளினிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவரும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.