பனைக்குளம்
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீதம் நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. 2022-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தினால் ஏறத்தாழ ஒரு லட்சம் எக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி இருக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வண்டும். 2022-2023 ஆண்டினை வறட்சி ஆண்டாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்