தமிழக செய்திகள்

கழுகுமலை அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருடியவர் கைது

கழுகுமலை அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே 2 வீடுகளில் நகை, பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

வீடுகளில் திருட்டு

கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். அன்று நள்ளிரவில் இவரது வீட்டில் உள்ள பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்து, பீரோவையும் உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றார்.

அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு இருந்த ஒரு பவுன் நகையையும் திருடிச் சென்று விட்டார்.

கைது

இதுகுறித்து செந்தமிழ் செல்வி, ராமசாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், அந்த 2 வீடுகளிலும் கைவரிசை காட்டியவர், தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துமாரியப்பன் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை நேற்று முன்தினம் கழுகுமலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 பவுன் நகையை போலீசார் மீட்டு, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT