தமிழக செய்திகள்

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்கள் புறக்கணிப்பு: தமிழக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்களை புறக்கணித்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழையும், தமிழ்நாட்டையும். தமிழ் மக்களையும் புறக்கணித்து வருகிறது. இதை 2014-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி வருகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி எழுதிய நூல்கள் அகற்றப்பட்டு உள்ளது, எங்கள் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக இருக்கிறது.

அந்த நூல்களை எதற்கு அகற்றினார்கள்? ஏற்கனவே 2007-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில், அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஏற்படுத்தப்பட்டு நிதி வழங்கப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து செய்யவிடவில்லை.

ஆதிவாசி மக்கள் வாழ்வியல்

தற்போது சுகிர்தராணி எழுதிய கைமாறு என்ற புத்தகத்தையும், பாமா எழுதிய என்னுடல் என்ற புத்தகமும் அகற்றப்பட்டு உள்ளன. அவை ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வியலையும் கொடுத்த நூல் ஆகும்.

இரவோடு இரவாக அந்த தமிழ்ப் புத்தகங்களை அகற்றி இருக்கின்றனர். ஏற்கனவே சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தமிழ்த்துறையை மூடும் ஆபத்தான நிலை உள்ளது.

உலக அளவில் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையை ஏற்படுத்தி தமிழை வளர்க்கின்றனர். ஆனால் டெல்லியில் தமிழை புறக்கணிக்கிறார்கள். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசிடம் இதுபற்றி பேசி சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT