தமிழக செய்திகள்

நெல்லை கல்குவாரி விபத்து: உயிரிழந்த 6-வது நபரின் உடல் மீட்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 6-வது நபரின் உடல் இன்று மீட்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் அவரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த நிலையில் 6-வது நபரின் உடல் இன்று மீட்கப்பட்டது. கற்குவியல்களுக்கு கீழே லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். 6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.

SCROLL FOR NEXT