நெல்லை,
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கேடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தெடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்னர் வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், வேளாண்மை எந்திரங்கள் என அனைத்து துறைகளின் சார்பில் 5 ஆயிரத்து 982 பயனாளிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர். அடுத்ததாக, விவசாய சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.