இசக்கிமுத்து என்ற முருகன் 
தமிழக செய்திகள்

முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை

தேனீக்கள் மனிதர்களின் எதிரிகள் அல்ல, அவை நம் நண்பர்கள் என்று இசக்கிமுத்து தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் இசக்கிமுத்து என்ற முருகன், தனது முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக மொய்க்கவிட்டு, புதிய சாதனை படைத்துள்ளார். அவரது இந்த துணிச்சலான முயற்சி, ‘சீனா உலக சாதனை புத்தகம்’ மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை வாலிபர்

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற முருகன் (வயது 27). இவர் விவசாயம் மற்றும் வேளாண்மை தொடர்பான படிப்பை முடித்தவர் ஆவார். படிப்பை முடித்த பின், அவர் மாற்று பணிகளை தேடி செல்லாமல் முழுநேரமாகத் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

மெய்சிலிர்க்க வைத்த சாதனை

இந்த நிலையில், தேனீக்கள் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த முருகன் முடிவு செய்தார். இதற்காக, அவர் ஒரு வினோதமான சாதனை முயற்சிக்கு திட்டமிட்டார். அதன்படி, நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில், முருகன் தனது முகம் மற்றும் தலைப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கவிட்டார். கண்கள், மூக்கு, வாய் என முகம் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக மூடி ஆக்கிரமித்தன.

5 மணி நேரம்

தேனீக்கள் கடித்தால் கடுமையான வலி மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழலிலும், முருகன் எதற்கும் அஞ்சாமல், துளியும் பதற்றமின்றி, சிலையை போல அசையாமல் அமர்ந்திருந்தார்.தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை தேனீக்களை தனது முகத்திலேயே அமரவைத்து, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் புதிய சாதனையை படைத்து அசத்தினார். இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒருவர் படைத்திருந்த சாதனையை இதன் மூலம் முருகன் முறியடித்துள்ளார்.

சீன புத்தகத்தில் அங்கீகாரம்

முருகனின் இந்த அசாத்திய சாதனை முயற்சியானது ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’ மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்களும், விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து சாதனையாளர் முருகன் தெரிவித்ததாவது:-

"தேனீக்கள் மனிதர்களின் எதிரிகள் அல்ல, அவை நம் நண்பர்கள். தேனீ வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு ஆகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆபத்தான முயற்சியை நான் மேற்கொண்டேன். யாரும் தகுந்த பயிற்சியின்றி இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் நெல்லை வாலிபர் முருகன் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, உலக அளவில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.