சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“பீகாரில் நிதிஷ் குமாருக்கு மக்களிடையே நல்ல மதிப்பு உண்டு. அவரது கட்சிக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் என்றைக்கு சேர்ந்தாரோ, அன்று முதல் அவர் மீதான நன்மதிப்பு சரிந்து கொண்டே வந்தது.
இப்போது, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவரை ராஜினாமா செய்ய வைக்கக் கூடிய அளவிற்கு நிலைமை போயிருக்கிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகி மாநிலங்களவைக்கு செல்லக் கூடிய நிலையை பா.ஜ.க. ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலை அ.தி.மு.க.விற்கு வந்துவிடக் கூடாது என்றுதான் தொடக்கத்தில் இருந்தே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் அ.தி.மு.க.வினர் என்னை கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ.க.வை விரைவில் அ.தி.மு.க. புரிந்து கொள்ளும். என்னுடைய கருத்துகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.