ஊட்டி,
நீலகிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என்று பெயரை பெற்றுத் தந்தது அதிமுகதான். ஒரு நபருக்குப் பணம் சொத்து அனைத்தும் இருந்தாலும் கல்வி ஒன்று தான் நிலையானது அதை யாராலும் அபகரிக்க முடியாது. மனிதனின் இறுதிக் காலம் வரை இருக்கக்கூடியது கல்விச் செல்வம் என்பதால் அந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக தான்.
மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது அதிமுக அரசுதான். முழுக்க முழுக்க மாநிலங்களின் நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். ஆனால் திமுக ஆட்சியில் திறமை இல்லாத முதல்-அமைச்சர் பொம்மை முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினால் இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை.
அதிகக் கடன் வாங்குவதில் முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழல், கமிஷன் கரப்ஷன் உள்ளிட்டவற்றின் முன்மாதிரியாக திமுகதான் அதேபோல் டாஸ்மாக் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது முன்மாதிரியாக திமுக தான் குடும்ப ஆட்சி. திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நீங்கள் கூட்டணி வைத்தால் நல்லது. அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?. அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; அதிமுகவை யாராலும் அடிமையாக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளை சுயமரியாதையோடு நடத்திவரும் கட்சி அதிமுக; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தி வருகிறது திமுக; சாறை உறிஞ்சிவிட்டு சக்கையை கூட்டணிக்கு தருகிறது திமுக.
காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கூட்டணி ஆட்சி கேட்கிறார்கள்; செல்வப்பெருந்தகை மறுக்கிறார்; திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டி, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைத்திட தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.