தமிழக செய்திகள்

விபத்தில் இறந்த போலீஸ்காரரின்குடும்பத்திற்கு நிதிஉதவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அய்யனார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி சாலை விபத்தில் இறந்தார். இதனை அடுத்து அவருடன் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்து 25 ஆயிரத்து 25 நிதி திரட்டினார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட தொகையை நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், அய்யனார் குடும்பத்தினரிடம் வழங்கினார். மேலும் போலீசாரின் செயலை வெகுவாக பாராட்டினார்.

இதுவரை 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்து உயிரிழந்த 29 காவல் நண்பர்களின் குடும்பத்திற்கு அனைத்து மாவட்ட "2011 காக்கி உதவும் கரங்கள்" நண்பர்கள் மூலம் ரூ.4 கோடியே 62 லட்சத்து 68 ஆயிரத்து 260 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.