தூத்துக்குடி,
தூத்துக்குடி சிவன் கோவிலில் நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அதிரடி ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், கோவில் சிலைகளை பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மண்டல சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முதற்கட்டமாக கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த சிலைகள் சேதமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை இன்ஸ்பெக்டர் வனிதா ராணி பார்வையிட்டு சோதனை செய்தார். அந்த சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின் கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றி சரியாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சுமார் 25 பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்குச் சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?" என கேட்டறிந்தனர். அதற்கு பக்தர்கள், "நாங்கள் பல வருடங்களாக பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன" என தெரிவித்தனர்.
நேற்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட இந்த விரிவான ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவன் கோவிலில் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.