சென்னை,
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் கடன் தவணைத் தொகையை செலுத்த அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்துள்ள சிறுகடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்தவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதாக குற்றம் சாட்டி சென்னை ஐகோர்ட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கடன் தவணைத் தொகையை செலுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் மோகன், வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. எனவே கடன் தவணையை செலுத்த மேலும் கால அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.