சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நாளை பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் ஏற்கனவே திட்டமிட்டப்படி மறியல் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம்.
இதில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட அனைவருமே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அரசு பெயர் அளவுக்கு கண் துடைப்புக்காக கட்டணத்தை குறைத்துள்ளதாக நாடகம் ஆடுகிறது.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை நாளைய போராட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.
அதன் பிறகு அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை 2 நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.
மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம். பஸ் கட்டண உயர்வுக்காக போராட்டம் நடத்தி சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.