மதுரை,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி கடந்த நவம்பர் 10-ந் தேதியில் இருந்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்கங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அங்குள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடிப்படையாக கொண்டு, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களில் வாடிக்கையாளர் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில், சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்கங்களில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இருக்கைகளின் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பார்வையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சினிமா காட்சி நேரத்தில் தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர். 100% இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.