சீர்காழி:
சீர்காழி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சாராய விற்பனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாக்கெட் சாராயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி, தில்லை விடங்கன், திட்டை, தென்பாதி, அகர திருக்கோவிலக்கா, திருக்கோளக்கா, பன்னீர்செல்வம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாக்கெட் சாராயம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் செம்மங்குடியை சுற்றியுள்ள தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், கிராநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குறைந்த விலையில் கிடைப்பதால் இந்த பாக்கெட் சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.
சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்
சாராயம் குடிப்பதால் அவர்கள் உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டு நோயாளியாகின்றனர். இந்த நிலையில் சீர்காழியில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் மேற்கண்ட கிராமங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தால், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்.
சாலை மறியல் போராட்டம்
பாக்கெட் சாராய விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என்றனர். இதுதொடர்பாக கிராம மக்கள் பேசி வெளியிட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.