சென்னை,
மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10பேர் உள்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இயற்கை விவசாயம் தொடர்பாக தேக்கம்பட்டியை சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாள், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, புதுச்சேரி கேசவசாமி, சமூக சேவகர் சுப்புராமன், தொழில் துறையைச் சேர்ந்த ஸ்ரீதர்வேம்பு, மறைந்த பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை தொழிலதிபர் சுப்ரமணியம், சென்னை மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன், கலைத்துறையைச் சேர்ந்த கே.சி. சிவசங்கர், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அரவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது, திமுகவுக்கே கிடைத்தது போன்றது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், திமுக கழக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும் உருவாக்கி ஆளத் தொடங்கிய நாள் ஜனவரி 26, குடியரசு தினம்; இந்தியக் குடிமக்களின் தினம். இந்திய நிர்வாகம் என்பது ஜனநாயக - சமத்துவ - சகோதரத்துவ - அறநெறி விழுமியங்களுடன் செயல்படும் என்பதை நாம் உலகுக்குச் சொன்ன நாள் இது. அதே நெறிமுறைகளுடன் எந்நாளும் வாழ்வோம்! நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.