பரமத்தி,
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கலை, இலக்கியத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கொரோனா விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, களிமண் சிற்பம் போட்டி, பொம்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற 12-ஆம் வகுப்பு மாணவி சினேகா, பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜீவநாகன், கர்ணன், மாணவிகள் தட்ஷிகா, கனிஷ்கா, ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த பரணிதரன், தனுசியா உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தலைமையாசிரியர் பழனிசாமி பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
கலையாசிரியர் சிவகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விழாவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.