செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்கு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் புளியரை சோதனை சாவடியில் போலீசார், லாரிகளில் அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனைக்கு பயந்து ஆங்காங்கே கனிமவள லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பண்பொழி பகுதிக்கு சென்று, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 லாரிகளை சோதனை செய்தபோது, அதில் அளவுக்கு அதிகமான கனிம வளங்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளுக்கு பேலீசார் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் அபராதம் விதித்தனர்.