தமிழக செய்திகள்

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார்.

திண்டுக்கல்,

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார் அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவருடன் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நேற்றும் அதிகாலை நேரத்தில் நட்சத்திர ஏரிச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் மற்றும் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஒரு சிறுமி, தி.மு.க. வெல்லட்டும் என்ற பாடலை பாடி காட்டினார்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பின்னர் திடீரென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்பு ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் தேநீர் அருந்தினார். அங்கு இருந்த தனியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். தனியார் ஓட்டலில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு வணக்கம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிறார்.

இதனிடையே நேற்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.