தூத்துக்குடி,
கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,600 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 1,300-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதியை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலையை அவமதிப்பு செய்தது சமூக விரோதிகளின் சதி. அவர்கள் கரோனா வைரஸைவிட மோசமான விஷக்கிருமிகள். சமுதாயத்துக்கு ஊறுவிளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைப்பவர்கள். அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்களை மக்களும் அடையாளம் கண்டு புறந்தள்ள வேண்டும் என்றார்.