மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் பேசியபோது எடுத்த படம். 
தமிழக செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமையும்; கமல்ஹாசன் நம்பிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமயில் 3-வது அணி அமையும் என்று அக்கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

4-ம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில், தேர்தல் வியூக விளக்கம், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆயத்தம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

பின்னர், விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

என்னுடைய மொழி என்னுடைய அடையாளம், என்னுடைய முகம். அதை அழிக்க நினைப்பவர்கள் நல்லவனாக இருக்க முடியாது. எனக்கு நண்பனாகவோ சொந்தகாரனகவோ ஆக முடியாது. மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிக்க பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு 7 முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. பசுமாடுக்கு கொடுக்கும் மரியாதையை கூட தமிழர்களுக்கு கொடுப்பதில்லை.

சோர்ந்து போகமாட்டேன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் எங்களுடைய வயிறு பற்றி எரிகிறது. நான் சொல்வதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட நல்லவற்றை சொல்ல வேண்டியது தானே. சொல்வாரா?அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தான் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. கட்சி என்பது குடும்பம் மாதிரி, அது பெரிதானால் தான் வெற்றியும் பெரிதாக இருக்கும். அரசியலில் ஒரு போதும் சோர்ந்து போக மாட்டேன்.

மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு தமிழக அரசியலை அசைத்து பார்க்கும். அதிர்வலைகளையும் ஏற்படுத்தும். அரசியலில் வந்ததால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுக்கட்டவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மாநில செயலாளர்கள் ரங்கராஜன், கமீலா நாசர், சினேகன், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்தை சந்தித்தது ஏன்?

விழா முடிவில், கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்? அரசியல் பேசினீர்களா?

பதில்:- 2 நண்பர்கள் சந்திக்கும்போது என்ன பேசுவார்களோ, அதைத்தான் பேசினோம். நாங்கள் அரசியல் பேசவில்லை. ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம்.

கேள்வி:- உங்களுடன் பணியாற்ற ரஜினிகாந்தை அழைப்பீர்களா?

பதில்:- அவர்தான் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் எப்படி கூப்பிட முடியும். அது ஒரு நல்ல நண்பனுக்கு நல்ல அடையாளமாக இருக்காது.

3-வது அணி அமையுமா?

கேள்வி:- ரஜினிகாந்த் அரசியலை இப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே...

பதில்:- அரசியலை கவனிப்பது எல்லோருடைய கடமை. கவனிக்காமல் விட்டதால்தான் இந்த அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். நான் அரசியலுக்கு வராமல் இருந்தபோது கூட, 40 ஆண்டுகளாக அரசியலை கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். எப்படி கவனிக்கனுமோ, அப்படி கவனிக்கவில்லை. அதுதான் தவறு.

கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமையுமா?

பதில்:- அமையும் என்று தோன்றுகிறது. அதற்கான மேகங்கள் கூடி வருவதாக தெரிகிறது. விரைவில் மழை பெய்யும்.

கேள்வி:- தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர உங்களுக்கு அழைப்பு வந்ததா?

பதில்:- அழைப்பு முதலில் வந்தது. எல்லோரும், எல்லோருக்கிட்டயேயும் பேசிக்கிட்டு இருந்தார்கள். ஆனால் என்னிடம் யாரும் நேரடியாக வந்து பேசவில்லை. எனக்கு அதுதான் கணக்கு. தூதுவிடுவது எல்லாம் எனக்கு கணக்கு கிடையாது.

சக்கர நாற்காலியில்...

கேள்வி:- சக்கர நாற்காலியில் உட்கார்ந்து மக்களை சந்திக்க வர மாட்டேன்' என்று நீங்கள் பேசி இருக்கிறீர்கள். நீங்கள் முதுமையை கேலி செய்வது போன்று உள்ளதே...

பதில்:- முதுமை எல்லோருக்கும் வருவது. அதை யாரும் கேலி செய்ய முடியாது. ஆனால் அந்த வயதில் ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் என்னுடைய கணிப்பு.

கேள்வி:- ஏற்கனவே சக்கர நாற்காலியில் இருந்த ஒருவரை விமர்சிப்பது போன்று இருக்கிறதே?

பதில்:- அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியையும், என்னுடைய முதுமையையும் பற்றி தான் பேசினேன்.

பெரியப்பா..., சித்தப்பா...

கேள்வி:- மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் யாராவது வருகிறார்களா?

பதில்:- அப்படி அழைக்க வேண்டும் என்றால் நிறையபேரை நான் கூப்பிட வேண்டும். எனக்கு கல்வியாகவும், அறிவாகவும், ஆசிரியராகவும் எனக்கு பல விஷயங்களை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என் நலன் விரும்பிகள். அவர்களைஎல்லாம் கூப்பிட வேண்டும். அவர்கள் ஆரோக்கியம் மற்றும் கொரோனா காலத்தையும் மனதில் கொண்டும், அனைவரும் முதல்-மந்திரிகளாக இருந்து கொண்டிருப்பதாலும் அவர்களை அழைக்கவில்லை.

கேள்வி:- எம்.ஜி.ஆர். ஆட்சியை நீங்கள் கொடுக்கப்போகிறீர்களா?

பதில்:- என்னை பொறுத்தவரையில் அவரிடம் இருக்கும் நல்லவற்றை நான் எடுத்துக்கொள்வேன். கருணாநிதியிடம் நல்லது இருந்தாலும் நான் எடுத்துக்கொள்வேன். ஏனெனில் நான் அவர்களிடம் கூட்டணி வைக்கவில்லை. அவர்களிடம் இருக்கும் நல்லவற்றை எடுத்துக்கொள்கிறேன். அது என் பெரியப்பா, சித்தப்பாவிடம் இருந்து எடுத்துக்கொள்வது போன்றது தான்.

ரஜினிகாந்தின் குரல்

கேள்வி:- 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குரல் கொடுத்தது போன்று ரஜினிகாந்த் இந்த தேர்தலில் உங்களுக்காக குரல் கொடுப்பாரா?

பதில்:- தெரியவில்லை. குரல் கொடுத்தால் அவராகத்தான் கொடுக்க வேண்டும். கூட்டணி என்பது கேட்கலாம், பேசலாம். குரல் கொடுப்பது என்பது தோன்றுகிறவர்களுக்கு எல்லாம் கொடுக்கலாம்.

கேள்வி:- தி.மு.க. சிறுபான்மையினர் அணியில் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி உதவி அளித்து இருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அது தான் அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை