தமிழக செய்திகள்

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் - உரிமையாளர் கோர்ட்டில் சரண்

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் பங்கின் உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார்.

சென்னை,

சென்னையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி பெய்த கனமழையால் சைதாப்பேட்டையில் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் கூரை திடீரென சரிந்து விழுந்தது. மழை காரணமாக பெட்ரோல் பங்கில் ஒதுங்கி நின்ற வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என பலர் பெட்ரோல் பங்க் கூரை விழுந்த விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த மதுராந்தகத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 63) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெட்ரோல் பங்கின் மேலாளர் வினோத் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது பங்கின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் 4 நாட்களாக தலைமறைவாக இருந்த உரிமையாளர் அசோக்குமார், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் சரணடைந்தார்.

SCROLL FOR NEXT