கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி பள்ளி வளாகத்தில் ஸ்ரீமதி பிணமாக மீட்கப்பட்ட நிலையில் மாணவி உயிரிழப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே பெரும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான பெரியநெல்லூர் கிராமத்திலுள்ள வீட்டில் வருவாய் துறை துணை வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டீசில் மாணவியின் பெற்றோர் இல்லாமலே உடற்கூராய்வு ஆய்வு செய்ய ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மாணவியின் பெற்றோர் மருத்துவமனை வந்தால் அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக மாணவியின் உடலின் முதல் பிரேத பரிசோதனையானது தகுதியற்ற மருத்துவர்களால் நடத்தப்பட்டதாக மாணவியின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடலுக்கு மறுபிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஐகோர்ட்டு அமைத்த மருத்துவக்குழு மறுபிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.