புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த மே மாதம் அவர் பொறுப்பேற்றதில் இருந்தே மோதல் அரங்கேறி வருகிறது. அரசு அதிகாரிகள் வாட்ஸ் அப் பயன்பாட்டில் தொடங்கி, மருத்துவ கலந்தாய்வு முதல் அனைத்திலும் கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் நேரடி சண்டை நடந்தது.
கடைசியாக புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 3 பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்ததில் அதிகாரச் சண்டையானது இரண்டு பேருக்குமிடையே முற்றியது. இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று தவளக்குப்பத்தில் புதுச்சேரி அரசு கொறடாவும், மணவெளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனந்தராமன் தலைமையில் கிரண்பேடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட போஸ்டரில் 'இங்கே ஒரு ஹிட்லர்' என்று வசனம் எழுதி, கிரண்பேடிக்கு குட்டி மீசையும், ஹிட்லர் தொப்பியும் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.
அதே போன்று புதுவையை காக்க வந்த பத்ரகாளியே என்று வெற்றி மங்கைக்கு வீர வாழ்த்து என்றும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் காளி கிரண்பேடி கையில் நாராயணசாமி மற்றும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் தலைகள் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.