தமிழக செய்திகள்

சபரிமலையில் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

சபரிமலையில் ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமான படை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட முர்மு மாலை 6.30 மணியளவில் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், தேவசம் போர்டு மந்திரி வி.என். வாசவன் மற்றும் பலர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் கவர்னர் மாளிகை சென்றார். இன்று இரவு அங்கு தங்கும் திரவுபதி முர்மு, நாளை காலை 9 மணி அளவில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். பம்பையில் இருந்து அய்யப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப்பாதை வழியாக 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் கொண்ட கான்வாய் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு அய்யப்பன் சன்னிதானத்தை சென்றடைகிறார். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலையில், அவரது வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் தரிசனத்தை முடித்து கவர்னர் மாளிகை திரும்புகிறார். 23-ம் தேதி ராஜ்பவன் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணினின் சிலையை ஜனாதிபதி முர்மு திறந்து வைக்கிறார்.

SCROLL FOR NEXT