சேலம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 7 மணிக்கே குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, காலை 10 மணிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் வந்து இங்கு போதிய அளவு தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை. தடுப்பூசி தீர்ந்துவிட்டதால் 19-ந் தேதி (திங்கட்கிழமை) வருமாறு பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊழியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முகாமில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்று கூறி, அவர்களை திரும்பி செல்லுமாறு மருத்துவ பணியாளர்கள் அறிவுறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நெல்லை டவுனைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சிதம்பரவல்லி, தனக்கு தடுப்பூசி போடவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன் என ஆவேசமாக மருத்துவ பணியாளர்களிடம் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், தட்டுப்பாடு காரணமாக 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.