தமிழக செய்திகள்

சென்னையில் பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்தார் பிரதமர் மோடி

நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை புதுச்சேரிக்கு சென்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடைகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 6 மணியளவில் அவர் மீண்டும் சென்னை வருகிறார். இரவு சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

இரவில் அவர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக நிர்வாகிகள் சந்திப்பில் 150 பேர் வரை பங்கேற்பதாக இருந்த நிலையில் அக்கூட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். அதற்கு பதிலாக சென்னை தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் (4-ம் தேதி) மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என ஒரு சிலரை மட்டும் பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.