ஆலங்குளம்,
திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆலங்குளத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆலங்குளம் பகுதி பீடித் தொழிலாளர்கள், விவசாயிகள் பகுதியாக உள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை சிறு தொழில்கள் வழங்கி வருகின்றன. சிறு தொழில்கள் தான் வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக உள்ளது. அந்த முதுகெலும்பை நரேந்திர மோடி நசுக்கி அழித்து வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. பீடி தொழில் போன்ற சிறுதொழில்களை அழித்து வருகின்றன.
தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா, தமிழ் கலாச்சாரம் இல்லையா, தமிழ் வரலாறு இந்தியாவின் வரலாறு இல்லையா. ஆனால் மோடி ஒரே மொழி, கலாச்சாரம், மதம் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். தமிழ்நாட்டை கட்டுப்படுத்தலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக மக்களை பற்றி மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் நேர்மையான கலாச்சாரத்தைக் கொண்டவர்களாவர். தமிழ் மொழி, கலாச்சாரம், மக்களை மோடி பாராட்ட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களை மதிக்க வேண்டும். மத்திய அரசு மதிக்கும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏழைகளையும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.