மதுரை,
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய 5 இடங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த மருந்து வாங்குவதற்கு 5 இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் இர்பான் கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால் இறந்தவர்களின் மருந்து சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்து வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.
மேலும் கைது செய்யப்பட்ட இர்பானுக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.