சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே வழங்கும் நிலையில், ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நான்காம் ஆண்டிலேயே கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரித்துள்ளன. இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் உயர்கல்வி உதவித் தொகை (Post Matric Scholarship) திட்டத்தின்கீழ் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் குடும்ப ஊதியம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும். அதனால் இந்தக் கட்டணத்தை மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் கேட்கக் கூடாது. முதல் நான்கரை ஆண்டுகளில் ஏதேனும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து இருந்தால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அரசே செலுத்தி விடும். ஆனால், ஐந்தாம் ஆண்டு கட்டணத்தை மாணவர்களிடம் கேட்கவே கூடாது என்பது தான் விதியாகும்.
ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஐந்தாம் ஆண்டுக்கான கட்டணத்தை நான்காம் ஆண்டின் முடிவிலேயே கட்டி விட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டத் தவறினால் நான்காம் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதனால், மாணவர்களும், அவரது பெற்றோரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
விதிகளை மீறி கட்டணம் செலுத்தும்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நெருக்கடி கொடுக்கும்போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குனருக்கும்தான் உள்ளது. ஆனால், இதில் தாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை; கட்டண நிர்ணயக் குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குனர் ஒதுங்கிக் கொண்டார். அதனால், கட்டணம் செலுத்த முடியாமல், தாங்கள் தேர்வு எழுத முடியுமா? என்பது தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவக்கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்தகைய கல்வி உதவித்தொகைகளை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், அதையும் தாண்டி பட்டியலின, பழங்குடியின மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரிகள் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண்பதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.