ஈரோடு,
செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் எம்.பி.யும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சத்தியபாமா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள் என அ.தி.மு.க.வினர் சுமார் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.
அ.தி.மு.க.வினர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. பழைய வலிமையை பெறவேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்றுதான் செங்கோட்டையன் கூறுகிறார். அதற்காக அவருடைய கட்சி பதவிகளை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்களுடைய பதவியை ராஜினாமா செய்கிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் பதவியில் நீடிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.