தமிழக செய்திகள்

குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் 3 மணிநேரம் கெட்டித் தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மின்னல் தாக்கி மாடு செத்தது. மரங்கள், மின்கம்பம் சாய்ந்தது.

கனமழை

வெள்ளகோவில் பகுதியில் சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதை குளிர்விக்கும் வகையில் நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 9 மணி வரை தொடர்ந்து பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது. கல்லாங்காட்டுவலசு, குமாரவலசு, உப்புபாளையம் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. உப்புப்பாளையம் ரோட்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாதுகாப்பிற்காக ஒரு சில குடும்பத்தினர் இரவோடு இரவாக மேடான பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

மாடு சாவு

சேனாபதிபாளையம் கிராமம் சக்திபாளையத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மின்னல் தாக்கி செத்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். தீத்தாம்பாளையத்தில் வேப்பமரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. சேரன் நகரில் மின்னல் தாக்கி மின்மாற்றி பழுதடைந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை 1 மணி வரை மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்களால் மின்மாற்றி சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. வெள்ளகோவில் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

--