சென்னை,
அரசு பள்ளி ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான உச்ச வயது வரம்பு, பெதுப் பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு, 40 வயதைக் கடந்தவர்களின் ஆசிரியர் கனவை நனவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது பா.ம.க.வின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்று அறிவித்திருப்பது நியாமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்றும் வயது வரம்பு உயர்வு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.