சென்னை,
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பிருத்தல் ஆகும். இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இன்றைய தினம் இந்தியாவில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், நாட்டு மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது கொரோனா பேரிடர் காலமாக இருப்பதாலும், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும், இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது, வழிபாட்டுத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அந்த சூழலில் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையின் போது தங்கள் வீடுகளின் மாடிகளில் குடும்பத்தினரோடு ரமலான் தொழுகையை நடத்தினர். அதே போல் இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து எளிமையான முறையில் ரமலான் தொழுகைகள் நடைபெற்றன.