ராமநாதபுரம்,
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு விசைபடகில் இருந்த 4 மீனவர்களையும் அதே போன்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு விசைப்படகில் 12 மீனவர்களையும் என 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
இதையடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற 26 ஆம் தேதி(நாளை) ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.