ராமேசுவரம்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சந்திரம்பாளையம் கிராமத்தில் இருந்து 2 பஸ்களில் 100 பேர் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நேற்று காலை புனித நீராடினா.
பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடற்கரைக்கு வந்தபோது இவர்களுடன் வந்த மணிவேல் (வயது 45) என்பவரை காணவில்லை. கடற்கரை முழுவதும் தேடிபார்த்தனர். அப்போது தமிழ்நாடு ஓட்டல் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் இறந்து கிடந்த மணிவேலின் உடலை பார்த்து உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா தலைமையிலான போலீசார், உடலை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மணிவேல் பெயிண்ட் வேலை பார்த்து வந்ததும், திருமணமாகாதவர் என்பதும், அக்னி தீர்த்த கடலில் நீராடியபோது கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் விசாரணை தெரியவந்துள்ளது.