தமிழக செய்திகள்

ரூ.1.20 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.20 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

அரசு புறம்போக்கு நிலம்

திருவண்ணாமலை டவுன்- மணலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் அருகில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 8.52 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தனியார் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. இது குறித்து திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை பாதுகாக்க திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையிலான வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசார் பாதுகாப்பு

இதையொட்டி அந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் காலியாக இருந்ததால் அதில் இருந்த செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆக்கிரமிப்பில் இருந்து மிட்கப்பட்ட நிலத்தினை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வருவாய் துறையினரின் இந்த நடவடிக்கையினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.