தமிழக செய்திகள்

முககவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள்

முககவசம் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், முககவசம் அணிந்து செல்போனில் செல்பி படம் எடுத்து டி.பி.யாக (டிஸ்பிளே பிக்சர்) பதிவிட்டும், அதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தவேண்டும்.

இதனை செய்யுமாறு தமிழக மக்களையும், தே.மு.தி.க. தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந்தேதி வரை அவரவர் செல்போனில் டிஸ்பிளே பிச்சராக வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT