சென்னை,
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த நிவாரணத் தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, வீட்டிற்கே சென்று நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வரும் 22ம் தேதி முதல் வீட்டிற்கு சென்று பணம் கொடுக்கும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.