பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்படும் விளம்பரப் பலகைகள்-பதாகைகளை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டது. அப்போது உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 23 விளம்பரப் பலகைகள் மற்றும் 70 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் சென்னையில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள்-பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.