கொண்டகுப்பத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியை தடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஏற்கனவே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்து உள்ளதால் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த இடத்தில் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலகம், நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அதே பகுதியை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும் இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி, புதிய அமைப்பு ஒன்ற உருவாக்கி இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பழைய கோவில் நிர்வாகிகள் ராணிப்பேட்டையில் கலெக்டர் வளர்மதியை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.