சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் கேட்டு சுயேச்சை வேட்பா ளர்கள் வேட்பு மனுவில் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம், பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டு இருந்தது.
பின்னர் பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டதாகக்கூறி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். நேற்று முன்தினம் முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுவில் வேட்பாளரின் சுய விவரங்களையும், அவருக்கு என்ன சின்னம் வேண்டும் என்பது தொடர்பாகவும் பதிவு செய்ய வேண்டும். சுயேச்சை வேட்பாளர்கள் 3 சின்னங்களுக்கு விருப்பம் தெரிவிக்கலாம்.
அந்தவகையில், சுயேச்சை வேட்பாளர்கள் முதல் விருப்பமாக தொப்பி சின்னத்தை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்த 4 சுயேச்சை வேட்பாளர்களில் 2 பேர் தொப்பி சின்னம் கேட்டு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.