விழுப்புரம்:
கோலியனூர் ரெயில்வே கேட் அருகில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே வளவனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தீபக்ராஜ் (வயது 46) என்பதும், இவர் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. ரவுடியான இவர் மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
இதையடுத்து தீபக்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.