கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சியில் நேற்று மதியம் 2 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதேபோல் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கல்வராயன்மலையிலும் பலத்த மழை பெய்தது. இதில் கச்சிராயப்பாளையத்திலிருந்து கல்வராயன்மலைக்கு செல்லும் சாலையில் கோமுகி அணை முகப்பு தோற்றம் அருகே மண் சரிவால் 2 பெரிய பாறைகள் உருண்டு விழுந்தது.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதில் ஒரு பாறை சாலையின் நடுவிலும், மற்றொன்று சாலையோரத்திலும் விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக யாரேனும் செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைபார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து பாறைகளை சாலையில் இருந்து அகற்ற முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொகலைன் எந்திரம் மூலம் பாறைகளை சாலையில் இருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.