தமிழக செய்திகள்

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த திருமூர்த்தியின் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்து அவர் கடந்த மாதம் 31-ந்தேதி உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி 31.7.2020 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்தவுடனே அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டேன்.

திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க நான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். மேலும், உயிரிழந்த ஹவில்தார் திருமூர்த்தியின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, அன்னாரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT