சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த ஜெயராஜ் -பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். அதைத்
தொடர்ந்து, செய்தித் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கடம்பூர் ராஜூ நேற்று ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மூத்த மகள் பெர்சி ஆகியோரிடம் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே அவர்களது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ரூ.25 லட்சம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தபடி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை விரைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன் உடன் இருந்தார்.