சென்னை,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல குழந்தைகள், இந்தக் கொரோனா பாதிப்பால் தங்களது தாய் தந்தையை இழந்து தவித்து வருகின்றன.
குடும்பத்தின் ஆதாரமாக இருந்து உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்தச் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டரில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்; 18 வயதில் வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களுக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பை அளிக்கும்.
இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய அதே பொருளாதார நெருக்கடி, வருவாய் ஈட்டும் ஒரு பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும். எனவே, வருவாய் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்த குழந்தைகளுக்கும் இதே உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.